ஏலாதி
ஏலாதி என்பது பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை. ஏலம், இலவங்கம்,
சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும்
சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். அதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் கொண்டிலங்குவதால் ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது.
ஏலாதி ஆசிரியர்
ஏலாதி ஆசிரியரின்
பெயர் கண்மேதாவியார். இது இவரது இயற்பெயர்ப் போல் தெரியவில்லை. கணி என்பதற்கு கணிதம்
(கணக்கு) என்றும் சோதிடம் என்றும் பொருள் படும். இத்துறைகளில் சிறந்து விளங்கியவர்
ஆதலால் ஆர் விகுதி சேர்த்து, மரியாதை நிமித்தம் “கணிமேதாவியார்” என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் நூலில் வலியுறுத்தும் கருத்துக்களைக் கொண்டு
எளிதில் உள்ளலாம்.
தற்சிறப்புப் பாயிரம் – கடவுள் வாழ்த்து
இந்நூலில், தற்சிறப்புப்
பாயிரமாக அமைந்தப் பாடல்,
“அறுநால்வ
ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர்
பேணி வழங்கிப் – பெறுநால்
மறைபுரிந்து
வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்
இறைபுரிந்து
வாழ்தல் இயல்பு”
இப்பாட்டில் வரும்
”அறுநால்வர்” என்பதற்கு,
(அறுநால்வர் – இருபத்துநான்கு
பேர்)
- ஐம்பெருங்குழு – 5
- எண்பேராயம் – 8
- ஐவகைச் சுற்றம் – 5
- ஆறங்கம் – 6
என்று பொருள் கொண்டு
உரையெழுதியிருக்கிறார்கள். இது பொருந்தாது. அறுநால்வர் என்ற சொற்றொடர் சமணத் தீர்த்தங்கரர்களைக் குறிக்கும் என்பதையும் ஈண்டு பார்ப்போம்!
அறுநால்வர் – எண்மூன்று
அறுநால்வர் என்பது
நிகழ்க்காலத் தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வரைக் குறிக்கும். சூளாமணி என்ற ஐஞ்சிறுங்காப்பிய
நூலில்,
“என்முத லிருபத்தீரிருவர் நாதர்கள்
நின்முத
லீரறு வகையர் நேமியர்
மன்முதல்
பலவர்கே சவர்கண் மாற்றவர்
தொன்முத
லவர்தொகை யொன்ப தொன்பதே – 400
திரிசஷ்டி சலகா
புருஷர்களைக் குறிக்கும் அப்பாடலில் வரும், ”என்முத
லிருபத்தீரிருவர்” என்ற சொற்றொடரை நோக்குக. இதன் பொருள் “என்னை முதலாகக் கொண்டு
இருபத்து நான்கு பேர்கள் நாதர்களாவர் (தீர்த்தங்கரர்களாவர்).
மேலும், திருநூற்றந்தாதி
என்ற நூலில் வரும்,
”மொண்மூ
வொருபரு வம்பொழிந் தாங்கிரு கொப்பினுட்பா
குண்மூ
விருவகைக் காலத் திடையுல குய்யக்கொள்ளு
மெண்மூ
வருமல்ல தீசரல் லாமைநல் லீசரென்று
திண்மூ
டர்கடொழிந் தேவர் மெய்காட்டித் தெளிவிப்பரே” – 97
என்ற பாடலில் வரும்
“மெண் மூவரு” என்ற சொற்றொடரையும் நோக்குக.
(மெண் மூவரு –
எண்மூவர் – இருபத்துநால்வர் – இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள்.)
இவற்றால் ஏலாதி
கடவுள் வாழ்த்தில் வரும் அறுநால்வர் என்ற சொற்றொடர் சமணத் தீர்த்தங்கரர்களைக் குறிக்கும் என்பது
விளங்கும்.
பதிப்பு வரலாறு
பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களில் பெரும்பாலும் சமண சமயத்தவர்கள் செய்தது. சுமார் 19ஆம் நூற்றாண்டில்தான் கீழ்க்கணக்கு
நூல்கள் பதிக்கப்பட்டன. பெரும்பாலான கீழ்க்கணக்கு நூல்களுக்கு பழைய உரைகள் கிடைக்கப்
பெறவில்லை. கிடைக்கப் பெறாத உரைகளுக்கு, பின்னாளில், பதிப்பித்தவர்கள் மற்ற புலவர்களை வைத்து உரையெழுதி வெளியிட்டார்கள்.
அவர்களுக்கு, சமண நூற்களில் பயிற்சியின்மையால், சில சொற்றொடர்களுக்கு தங்களுக்குத்
தெரிந்த பொருள்களைக் கொண்டு உரையெழுதினார்கள். அவற்றுள் அறுநால்வர் என்பது ஒரு பானைச்
சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
நூல் கருத்து
சிறப்புப் பாயிரம்
இல்லறத்தையும், துறவறத்தையும் போற்றி, கணிமேதாவியார் நூல் செய்திருப்பதாகக் கூறுகிறது.
சமணம் இல்லறத்தை வெறுத்தது என்று தூற்றுவோர்கள் கவனிக்கவும். இல்லறம், துறவறம் என்று அறத்தைப் பகுப்பதுச் சமண சமயக் கொள்கை. இந்நூலில் நாற்பொருளுள்
முதலான அறத்தைக் கலந்துக் கொடுத்திருக்கும் பாங்கு எண்ணத்தகும்.
ஏலாதியும் குறளும்
பதினெண் கீழ்க்கணக்கு
நூலுள் பெரும்பாலான நூல்கள் திருக்குறள் கருத்தை போற்றி வருவதுபோல, ஏலாதியின் பல பாடல்கள்
குறளின் கருத்தைக் கொண்டு விரவி வருகின்றது. ஏலாதியின் சீரியக் கருத்துக் கொண்ட சில
பாடல்களை இங்குப் பார்க்கலாம்.
“கொலை
புரியான், சொல்லான் புலால்மயங்கான் கூர்ந்து
அலை புரியான்
வஞ்சியான் யாதும் –நிலைதிரியான்
மண்ணவர்க்கும்
அன்றி மதுமலிபூங் கோதாய்
விண்ணவர்க்கு
மேலாய் விடும். – 2
தேன் மலிப் பூங்கோதாய்,
பிறவுயிர்களை கொல்லாதவன், அதற்கு இணங்காதவன், புலால் உணவை உண்ணாதவன், பிறர்க்கு துன்பம்
செய்யாதவன், எவருக்கும் வஞ்சனைப் புரியாதவன், எந்நிலையிலும், தன்னிலையிலிருந்து தாழாதவன்
ஆகிய தன்மைகளைக் கொண்டவன், இம்மண்ணுலகத்தோர் மட்டுமன்றி விண்ணுலகத்தோரும் போற்றிவார்கள்.
சாவா எளிதரிது
சான்றாண்மை நல்லது
மேவல்
எளிதரிது மெய்போற்றால் – ஆவதன்கண்
சேறல்
எளிது நிலையரிது தெள்ளியராய்
வேறல்
எளிதரிது சொல் – 39
உயிரை விடுதல்
எளிது. ஆனால் கல்வியில் சான்றோனாய் திகழ்தல் அரிது. இல்லறத்தை ஏற்பது எளிது. ஆனால்
அதன் உயர்நிலையிலிருந்து வழுவாது நிற்றல் அரிது. துறவறத்தை ஏற்பது எளிது. ஆனால், அதனை
முழுதாய் நோற்றல் அரிது.
ஏலாதி நோயைக் குணப்படுத்தி உடம்பைத் தேற்றுவது போல,
ஏலாதிச் செய்யுள்கள், மன கசடுகளை அகற்றி ஆன்மத்தில் முன்னேற்றும் என்பதில் ஐயமில்லை.
யாவரும் ஏலாதி கற்றல் வேண்டும்!
அறம் மறவற்க! அறமல்லது
துணையில்லை!!
இரா.பானுகுமார்,
சென்னை
No comments:
Post a Comment